வாழப்பாடியை அடுத்த தும்பல் மற்றும் பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், நவீன வசதிகளுடன் கூடிய புறநோயாளிகள் பிரிவு கூடுதல் கட்டடங்கள் மற்றும் பணியாளர் குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
பேளூர் மற்றும் தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாகத் தரம் உயர்த்தப்பட்டன. இதனையடுத்து, பேளூரில் ரூ. ஒரு கோடியில் 30 படுக்கையுடன் கூடிய நவீன கட்டடம், தும்பல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.45 லட்சத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புறநோயாளிகள் பிரிவு கட்டடம், ரூ.70 லட்சத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த புதிய கட்டடங்களை சேலத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து தும்பல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம், மருத்துவர்கள் பிரீத்தி, ஷபானா, ஹனிப்பிரியா மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் சீத்தாராமன், முருகன், மாதேஸ்வரன், ராஜேந்திரன், ஆனந்தன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி புதிய கட்டடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
பேளூர் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் நந்தினி மற்றும் மருத்துவர்கள் பேரின்பம், கீர்த்தனா, பிரபாகரன், அபிபிரியா, உள்ளூர் பிரமுகர்கள் ராஜேந்திரன், அம்மாசி, பூபாலன், ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.