தமிழகம், கேரளத்தில் இயங்கி வரும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கிடையே நடைபெற்ற மண்டல அளவிலான இசை மற்றும் பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக ஆத்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டிகளியில் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளிடையே நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்ற கேரள மாநிலம், வயநாடு பூக்கோடு ஏகலைவா பள்ளிக்கு ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இரண்டாமிடம் பெற்ற சேலம் மாவட்டம் அபிநவம் ஏகலைவா பள்ளிக்கு ரூ. 35 ஆயிரத்துக்கான காசோலை, சான்றிதழ்களும், மூன்றாம் இடத்தைபெற்ற கேரள மாநிலம் இடுக்கி ஏகலைவா பள்ளிக்கு ரூ. 25 ஆயிரம் காசோலையும், சிறப்பு பரிசை பெற்ற வேலூர் மாவட்டம் அத்தானவூர் ஏகலைவா பள்ளிக்கு ரூ. 10 ஆயிரம் காசோலையும் வழங்கப்பட்டன.
பரிசுத் தொகை மற்றும் கேடயம், சான்றிதழ்களை ஆட்சியர் ரோஹிணி ராம்தாஸ் வழங்கிப் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்கள் அதிகமாக காணப்படுவர். அவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளி மிகவும் சிறந்து விளங்குகிறது. பாடங்களில் மட்டுமல்லாமல் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்குகிறது என்றார்.
முன்னதாக பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் பி.சுகந்தி பரிமளம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் க. காமராஜ், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் ஆர்.எம். சின்னதம்பி, அ. மருதமுத்து, கு.சித்ரா, ஆத்ம குழு தலைவர்கள் சி. ரஞ்சித் குமார், கே.பி. முருகேசன், ஆர். ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அபிநவம் ஏகலைவா உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் க.ஸ்டாலின் நன்றி கூறினார்.