எடப்பாடி அருகே இரண்டாவது மாடியிலிருந்து விழுந்த கட்டடத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எடப்பாடியை அடுத்த சித்தூர் அருகில் உள்ள செட்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தொப்பாகவுண்டர் மகன் குழந்தைசாமி (46) கட்டடத் தொழிலாளியான இவர், அண்மையில் சித்தூரை அடுத்த தைலாங்காட்டைச் சேர்ந்த பழனிசாமி (50) என்பவருக்குச் சொந்தமான புதிய கட்டடத்தில் கட்டுமான வேலை செய்து கொண்டிருந்தார். கட்டடத்தின் 2-வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது குழந்தைசாமி தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த குழந்தைசாமி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். பூலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.