மூன்று நாள் சுற்றுப்பயணமாக சேலம் வந்த மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். பல்வேறு இடங்களில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக சென்னையிலிருந்து விமானத்தில் சேலத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தார். சேலம் விமான நிலையத்திற்கு வந்த கமலஹாசனை அக் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
மகுடஞ்சாவடியில்...
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி மற்றும் இளம்பிள்ளை பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பொது மக்களைச் சந்தித்துப் பேசினார். அவரை மகுடஞ்சாவடி கட்சி நிர்வாகிகள் ராம்குமார், சரவணன், தங்கராஜ், விமல், பிரபு உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு கமல்ஹாசன் பேசியதாவது: எங்களுக்கு மேடை கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மறுப்பு தெரிவிக்க, தெரிவிக்கதான் எங்களுக்குக் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. இப் பகுதியில் முக்கிய கோரிக்கையான மகுடஞ்சாவடி பேருந்து நிலையம் அமைக்கவும், கழிவுநீர் ஓடை வசதி விரிவுபடுத்தவும், வாரச் சந்தையை விரிவுபடுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்னர், இளம்பிள்ளை வந்த அவருக்கு பேருந்து நிலையம் அருகே சுதா சீனிவாசன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கமல்ஹாசன் பேசியதாவது:
நெசவுத் தொழிலுக்கு புகழ்பெற்று விளங்கும் இளம்பிள்ளை மக்களுக்கு என் முதல் வணக்கம். ஜிஎஸ்டி வரியால் ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளீர்கள். பொதுமக்களாகிய உங்களை எப்போது நான் நேரில் சந்திக்க வருவேன் என்றார்.