எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
இதனால் இந்தப் பகுதியில் நிலக் கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். போதிய மழைப் பொழிவு இல்லாத நிலையில், எடப்பாடி, வெள்ளரி வெள்ளி, சித்தூர், செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் மானாவாரியாக பயிர் செய்யப்பட்டிருந்த நிலைக்கடலை பயிர்கள் கருகி வந்தன. இந்நிலையில், திடீரென திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது நிலக்கடலை விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்தது.
சங்ககிரியில்
சங்ககிரியில் ஞாயிறு, திங்கள் இரண்டு நாள்களிலும் பகலில் வெப்பம் வழக்கத்தைவிட அதிகரித்து வந்தது.
இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை இரவு 9.15 மணிக்கு திடீரென குளிர்ந்த காற்று வீசியதுடன் 10 மணியைக் கடந்தும் நீண்ட நாள்களுக்குப் பிறகு லேசான மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. பழைய பேருந்து நிலைய வளாகம் முன்பு மழைநீர் வெளியே செல்ல சரியான வழி இல்லாததால், அந்தப் பகுதியில் தேங்கி நின்றது. பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் நிழற்கூடை இல்லாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். மழை பெய்து கொண்டிருந்த போது மின்சாரம் தடைபட்டிருந்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை குளிர்ந்த காற்று வீசியது.