கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் மனமுடைந்த பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

சேலத்தில் கணவர் விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியதால் மனமுடைந்த பெண் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சேலத்தில் கணவர் விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியதால் மனமுடைந்த பெண் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
 சேலம் ரயில் நிலையம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (33). இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.
 கடந்த 2014 இல் புவனேஸ்வரிக்கும், புது சாலை பகுதியைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. கடந்த சில மாதங்களாக புவனேஸ்வரிக்கும், அவரது கணவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது.
 இதுதவிர புவனேஸ்வரியை அவரது மாமியார் கொடுமைப்படுத்தி வந்தார் எனக் கூறப்படுகிறது. இதனால் புவனேஸ்வரி தனது பெற்றோர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த வாரம் கௌதமன், புவனேஸ்வரியுடன் வாழப் பிடிக்கவில்லை என்பதால் விவாகரத்து செய்து கொள்கிறேன் என வழக்குரைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி சில நாள்களாக மனம் வெதும்பிய நிலையில் இருந்து வந்தாராம். இதை அறிந்த புவனேஸ்வரியின் பெற்றோர் அவரை சமரசப்படுத்தி வந்தனர். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை பகலில் புவனேஸ்வரி கணவர் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது மாமியார் இருந்துள்ளார். அப்போது அவரது மாமியார் திட்டி அனுப்பியதாகத் தெரிகிறது. இதுபற்றி தனது பெற்றோரிடம் புவனேஸ்வரி எதுவும் கூறாமல் இருந்துவிட்டார். இந்தநிலையில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் புவனேஸ்வரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில், காவலர்கள் உடனே விரைந்து வந்து புவனேஸ்வரியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு திரளாக வந்திருந்தனர். புவனேஸ்வரியின் உறவினர்கள் கூறும்போது, கெüதமன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். புவனேஸ்வரி தன்னை கணவர் விவாகரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பி இருந்தாலும், அவருடன் இணைந்து வாழ விரும்பினார் . ஆனால் கௌதமன், புவனேஸ்வரியை வீட்டை விட்டு விரட்டி விட்டுள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com