கெங்கவல்லியில் நிகழ்ந்த வெடி விபத்தில் படுகாயமடைந்த விவசாயத் தோட்டத்தின் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கெங்கவல்லி அருகே நடுவலூர் மொட்டைப்பாலம் அருகே ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்தில் ரஷீத் உசேன்(45) என்பவர் பட்டாசு கிடங்கை அனுமதியின்றி நடத்திவந்தார். அதில் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில், அதில் வேலை செய்த தொழிலாளி பாலமுருகன் (28) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அந்த சம்பவத்தில் தோட்டத்தின் உரிமையாளர் ராஜேந்திரன் படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் ரஷீத் உசேன் தலைமறைவானார். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸார் வழக்குப் பதிந்து ரஷீத் உசேனை தேடிவந்தனர். அதேவேளையில் ராஜேந்திரனின் உறவினர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை திரளாகச் சென்று, பட்டாசு கிடங்கு உரிமையாளர் ரஷீத் உசேனை, மூன்றாவது குற்றவாளியாக வழக்கில் சேர்த்ததை மாற்றி, முதல் குற்றவாளியாக சேர்க்க வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன், சிகிச்சை பலனின்றி, திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு உயிரிழந்தார்.
ரஷீத் உசேன் சரண்...: இதனிடையே, ரஷீத் உசேனை போலீஸார் 4 தனிப் படைகள் அமைத்து தேடிவந்தனர். இந்நிலையில், அவர் சேலம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பிற்பகல் சரணடைந்தார். அப்போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால், அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கெங்கவல்லி போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.