சங்ககிரி கிழக்கு குறு வட்டத்துக்குள்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் வருவாய் ஆய்வாளர் விரோதப் போக்கை தொடர்ந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை இடமாற்றம் செய்யக் கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளையின் சார்பில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட துணைத் தலைவர் கே.ராமசாமி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசியது:
சங்ககிரி கிழக்கு குறு வட்ட வருவாய் ஆய்வாளர் அவரது வரைமுறைக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் ஊழியர் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருகிறார். செப்டம்பர் 3ஆம் தேதி வடுகப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே சென்றார். இதை நாங்கள் கண்டிக்கிறோம். அவரை வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.
இதில் மாவட்ட பிரசார செயலர் எம்.முருகன், வட்டத் தலைவர் பி.மணி, பொருளாளர் பி.சுமதி, கோட்ட செயலர் பி.பிரதீப்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.