சேலம் மாவட்டத்தில் 251 மி.மீ. மழைப் பதிவு

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சேலத்தில்


வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சேலத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை வெயில் தாக்கம் கடுமையாக இருந்தது.
இதனிடையே இரவு 9 மணிக்கு லேசான தூறல் மழை பெய்தது. சிறிது நேரத்தில் சேலம் நகரப் பகுதியில் கன மழை பெய்தது. நள்ளிரவு வரை சுமார் 3 மணி நேரம் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். அதேபோல மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, தம்மம்பட்டி, வீரகனூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்)
சேலம் - 70, ஓமலூர்-59, காடையாம்பட்டி-48, வீரகனூர்-23, தம்மம்பட்டி-22, ஏற்காடு-15, கரியகோவில்-5, வாழப்பாடி-2, சங்ககிரி-3, எடப்பாடி-1 என மாவட்டத்தில் சுமார் 251 மில்லி மீட்டர் அளவுக்கு மழைப் பதிவாகி உள்ளது.
ஆற்றில் சிலை கரைக்க இறங்கிய இளைஞர் மாயம்
சங்ககிரி, செப். 15: தேவூர் அருகே கோனேரிப்பட்டி. கருங்கல்பாளையம் படித்துறையில் சனிக்கிழமை விநாயகர் சிலை கரைக்க ஆற்றில் இறங்கிய இளைஞரை காணவில்லை. அவரை போலீஸார், வருவாய்த்துறையினர் தீயணைப்பு வீரர்கள் மூலம் தேடி வருகின்றனர்.
சேலம், சூரமங்கலம், போடியநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் ஜூவா(21). இவர், சேலம் தனியார் கல்லூரியில் இளநிலை கம்யூட்டர்அறிவியல் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பு படிக்கிறார். விநாயகர் சிலையை கரைப்பதற்காக நண்பர்களுடன் சனிக்கிழமை தேவூர், கோனேரிப்பட்டி ஐயனாரப்பன் கோயில் அருகே ஆற்றில் இறங்கியுள்ளார். ஜூவா ஆழம் அதிகம் உள்ள பகுதிகளில் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. நீரில் மூழ்கிய அவர் கரைக்கு திரும்பாததால் எடப்பாடி தீயணைப்புத்துறை வீரர்கள் சனிக்கிழமை இரவு முழுவதும் தேடி வந்தனர்.
பெருமாள் கோயில் குடமுழுக்கு
ஓமலூர், செப். 15: கருப்பூர் செங்கரடு ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் குடமுழுக்கு சனிக்கிழமைநடைபெற்றது.
பழமை வாய்ந்த இக் கோயிலில் விழாவையொட்டி ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு பிரதிஷ்டா ஹோமம், சாந்தி ஹோமம், நாடி சந்தானம், பூர்ணாஹுதியும் ஸ்ரீ பத்மாவதி தாயார், சமேத ஸ்ரீ ஸ்ரீ சீனிவாச பெருமாள், 23 அடி வடக்கு ஆஞ்சநேயர், கருடாழ்வார் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகமும் திருமஞ்சனம், சாற்றுமுறை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசத்துக்கு ஸ்ரீ பி.சந்தானம் பட்டாச்சாரியர் தலைமையில் குழுவினர் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com