தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து, எடப்பாடி பேருந்து நிலையம் முன் அவர் வெள்ளிக்கிழமை இரவு பேசியது:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலினால் மதுரை மாநகருக்குள் நுழைய முடியவில்லை. ஆனால் அவரால் இப்போது எவ்வித அச்சமும் இன்றி செல்ல முடிகிறது. இதிலிருந்தே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு இப்போது சிறப்பாக உள்ளது உறுதியாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் தினந்தோறும் என்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி பிரசாரம் செய்து வருகிறார். அவர் ஒரு கட்சியின் தலைவர் என்ற நிலையினை அறிந்து பண்புடன் பேச வேண்டும். தமிழகத்தில் அதிமுக தலைமையிலானக் கூட்டணி மக்கள் நலம் காக்கும் சிறப்பான
கூட்டணி. ஆனால் திமுக தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி. திமுக மக்கள் நலனை ஒருபோதும் கருத்தில் கொண்டதில்லை.
நான் தமிழக முதல்வராகப் பதவியேற்ற தினத்திலிருந்து, மாநிலம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் பெரும்பாலானவை எனது தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் தூண்டப்பட்டவையாகும். இப்போராட்டங்களுக்கு உரிய முறையில் தீர்வு கண்டு தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது.
எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு வாக்களித்து அமோக வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றார்.