சேலம் தெற்குத் தொகுதிக்குள்பட்ட 271 வாக்குச் சாவடி மையங்களில் தேர்தல் நாளன்று பயன்படுத்தப்படும் உபகரணங்களை உறையிலிடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டார்.
சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 271 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஏப்.18 இல் வாக்குப் பதிவு நாளன்று வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள படிவங்கள், உறைகள், முத்திரைகள், வாக்களித்தவர்களுக்கு வைக்கப்படும் மை பாட்டில்கள், எழுதுப் பொருள்கள் உள்ளிட்ட உபகரணங்களை உறையிலிடும் பணிகள் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ரோகிணி ராம்தாஸ் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் ஆகியோர் திங்கள்கிழமை பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் ப. ரமேஷ்பாபு , உதவி செயற்பொறியாளர்மு. லலிதா, துணை வட்டாட்சியர் (தேர்தல்) வி. கணேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர்
உடனிருந்தனர்.