வழக்குரைஞர்களுக்கான சேமநல நிதியை உயர்த்திக் கொடுத்தது அதிமுக அரசு என அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் பேசினார்.
மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் சேலம் நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நீதிமன்றத்துக்கு வந்த வழக்குரைஞர்களை சந்தித்து அவர் பேசியது:
நானும் ஒரு வழக்கரைஞர் என்பதால் வழக்குரைஞர்களின் தேவையை அறிந்து உடனடியாக அனைத்தையும் பூர்த்தி செய்வேன்.
சேலத்துக்கு லா சேம்பர் கொண்டு வந்தது தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிதான். தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் பணிகள் முடிந்து லா சேம்பர் திறக்கப்படும்.இதேபோல் வழக்குரைஞர்களுக்கான சேமநல நிதி ரூ. 5.25 லட்சத்திலிருந்து ரூ 7 லட்சமாக உயர்த்தி வழங்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. மேலும் உச்ச நீதிமன்றத்தின் கிளையை சேலத்தில் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே வழக்கரைஞர்களுக்கான பல சலுகைகளை வழங்கும் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், எம்எல்ஏ வெங்கடாசலம், எம்பி வீ. பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து பள்ளப்பட்டியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைக்குச் சென்ற கேஆர்.எஸ். சரவணன், அங்குள்ள அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் போக்குவரத்து பணியாளர்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.