வாழப்பாடி அருகே விளாம்பட்டி காப்புக்காடு செங்காட்டூர் வனப்பகுதியில், மான் வேட்டையாடி கறியை சமைத்து உண்ட நான்கு பேரை பிடித்து வனத்துறையினர் மொத்தம் ரூ. 80,000 அபராதம் வசூலித்தனர்.
வாழப்பாடி வனச்சரகம் குறிச்சி பிரிவு விளாம்பட்டி காப்புக்காடு செங்காட்டூர் வனப்பகுதியில், சின்ன வேலாம்பட்டி கோவேரி காட்டில் மான் வேட்டையாடிய கும்பல், கறியைப் பிரித்து சமைத்து உண்டதாக, வாழப்பாடி வனச்சரகர் ஞானராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனவர்கள் குமரேசன், சிவகுமார், வனக் காப்பாளர்கள் மாணிக்கம், ஜெயக்குமார், ஜெயராமன், சின்னதம்பி, முனீஸ்வரன் மற்றும் தோட்டக் காவலர் முத்தையன் ஆகியோர் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை சின்னவேலாம்பட்டி கிராமத்தில் சோதனை நடத்தினர். அப்போது, சின்னவேலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி (23), தர்மன் (39), சண்முகம் (45), சின்னசாமி (37) ஆகிய 4 பேரின் வீடுகளில் மான் கறி குழம்பு வைத்தது வனத் துறையினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் பிடித்த வாழப்பாடி வனத் துறையினர், நான்கு பேருக்கும், மாவட்ட வன அலுவலர் பெரியசாமி உத்தரவின்பேரில் தலா ரூ. 20 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து மொத்தம் ரூ. 80 ஆயிரம் வசூலித்தனர்.