சேலம் பெரமனூர் அருகே இயற்கை உரம் தயாரிப்பு மையத்தை இடமாற்றம் செய்யக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்க, இயற்கை உரம் தயாரிப்பு மையம் கட்டப்பட்டுள்ளது. அஸ்தம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட பெரமனூர் கோவிந்தாபிள்ளை தோட்டம் அருகே இயற்கை உரம் தயாரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதால், உர மையத்தை இடமாற்றம் செய்யக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், புதன்கிழமை காலை அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திடீரென ஓமலூர் பிரதான சாலையில் டிவிஎஸ் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பள்ளப்பட்டி போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இயற்கை உரம் தயாரிப்பு மையத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர் என அனைவரும் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, உரம் தயாரிப்பு மையத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.