ஆத்தூர் தேசிய புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.
ஆத்தூரை அடுத்துள்ள புது கொத்தாம்பாடியைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கிருஷ்ணமூர்த்தி (40), விவசாயி. இவர், ஞாயிற்றுக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் தலைவாசல் சென்று விட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆத்தூர் தேசிய புறவழிச் சாலையில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி கிருஷ்ணமூர்த்தியின் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஆத்தூர் ஊரக காவல் துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
இதேபோல், துலுக்கனூர் தேசிய புறவழிச் சாலையில் சாலையைக் கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர், புதுச்சேரியில் இருந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த, கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.