அரசு இ-சேவை மையங்களில் ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்து கொடுக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி தாலுகா அலுவலக இ-சேவை மையங்கள் மற்றும் இதர இ-சேவை மையங்களில் ஸ்மார்ட் ரேசன் அட்டையில் சிறு திருத்தங்கள் செய்ய சேவை மைய ஊழியர்கள்அதிக கட்டணம் வசூலித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த 2018-இல் இருந்து ரேஷன் அட்டை தொடர்பான பணிகள் இ-சேவை மையங்களில் மேற்கொள்வது நிறுத்தப்பட்டன. இதனால் ரேஷன் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள முடியாமல் இப்பகுதியினர் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் கூறும் போது, ரேஷன் அட்டை வேண்டி ஏழைகள் தான் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், ரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்ய இரண்டாவது சனிக்கிழமை உணவு வழங்கல் அலுவலகங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. ஆனால், அங்கும் அந்தப் பணிகள் முழுமையாக செய்து தருவதில்லை. இதனால், தனியார் கணினி மையங்களை நாட வேண்டியுள்ளது. அங்கு, அதிகளவில் பணம் வசூலிக்கின்றனர். எனவே, இ-சேவை மையங்களில் மீண்டும் ரேஷன் அட்டையில் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் வசதியை தொடங்க வேண்டும். அதிக கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறினர்.