கெங்கவல்லி அருகே வீரகனூரில் ஏரியை தூர்வாரும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கெங்கவல்லி அருகே வீரகனூரில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி மற்றும் நீர்வழிப் பாதையில் தூர்வார மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதையடுத்து, ஏரி, நீர்வழிப் பாதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன் வீரகனூர் வந்து இப்பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ராமன், மராமத்துப் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் ஒரு பொக்லைன் இயந்திரம் மட்டுமே இப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், வீரகனூர் ஆறு, ஏரிகளில் நீர்வரத்து வந்தால், குடிமராமத்துப் பணி முற்றிலும் தடைபடும் சூழல் உள்ளது. எனவே, அதற்குள் ஏரி குடிமராமத்துப் பணிகளை கூடுதல் இயந்திரங்கள் வைத்து விரைந்து முடித்திட வேண்டும் என வீரகனூர் விவசாயிகள் சேலம் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.