தம்மம்பட்டி அருகே வி.ஏ.ஓ. அலுவலக வளாகத்தில் மர்மமாக கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள ஜங்கமசமுத்திரம் வி.ஏ.ஓ. அலுவலக வளாகத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை இரவு தம்மம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
அதில், சடலமாக கிடந்தவர் தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் பழனி (47) என்பதும், ஓட்டுநர் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. அதையடுத்து, செவ்வாய்க்கிழமை அவரது உடலை அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.