இளம்பிள்ளை அருகே நடத்துநர், பயணி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அரசுப் பேருந்து சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த பயணி ஒருவர், சின்னப்பம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து இளம்பிள்ளைக்கு செல்வதற்காக அரசுப் பேருந்தில் புதன்கிழமை ஏறியுள்ளார். அப்போது இறங்கும் இடம் தொடர்பாக பேருந்து நடத்துநருக்கும், பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு பேருந்து சிறைபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று நடத்துநர் மற்றும் பயணிகளை சமரசம் செய்தனர். அதன் பின்னர் பேருந்து புறப்பட்டுச் சென்றது.