வாழப்பாடி அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விபத்துக்குள்ளான காரின் சக்கரங்களை திருடியதாக மூவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பவுல்ராஜ் (43) தனது மனைவி, குடும்ப நண்பர்களோடு கடந்த ஜூலை 2-ஆம் தேதி நாமக்கல் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பி வந்தபோது, சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி மைக்ரோ ஸ்டேஷன் பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், விபத்துக்குள்ளான கார் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை அதிகாலை காரில் வந்த மர்ம நபர்கள் விபத்துக்குள்ளான காரின் சக்கரங்களை கழற்றி திருடிச் சென்றனர். இதனைக் கண்ட அந்தப் பகுயையச் சேர்ந்த தமிழரசன் மற்றும் அவரது நண்பர்கள், கார் சக்கரங்களைத் திருடிச்சென்ற மூவரையம் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். பிடிபட்ட இளைஞர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், மூவரும், தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த பைரநாயக்கன்பட்டி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம் மகன் சௌந்தர் (22), நரிப்பள்ளியைச் சேர்ந்த ஆனந்தன் மகன் மதியழகன் (22) மற்றும் பைரநாயக்கன்பட்டி மோட்டூர் கோவிந்தன் மகன் சாந்தகுமார் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார், ஆத்தூர் கிளைச் சிறையில் அடைத்தனர். திருடுவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.