சேலம் உருக்காலை தனியார்மயத்தைக் கைவிடக் கோரி, அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் உருக்காலையை விற்பனை செய்வதற்கான உலக அளவிலான டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் செயில் நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து சேலம் உருக்காலை தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சேலம் உருக்காலை தனியார்மயத்தைக் கைவிட வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொமுச, சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இதில் தொமுச செயலாளர் பழனியப்பன், ஐஎன்டியூசி தலைவர் வடமலை, சிஐடியூ செயலாளர் உதயகுமார், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் விமலன், எச்எம்எஸ் தலைவர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும் திமுக எம்எல்ஏ வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், காங்கிரஸ் நிர்வாகி பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராமமூர்த்தி, அமமுக நிர்வாகிகள் எஸ்.கே.செல்வம், எஸ்.இ.வெங்கடாசலம், மாதேஷ் உள்ளிட்டோர் நேரில் சென்று தங்களின் ஆதரவைத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.