கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சங்ககிரியை அடுத்த நாட்டாம்பாளையம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கண்ணன் சுவாமிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி வட்டார யாதவா சங்கம் சார்பில் காவேரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் அரிசி மாவினால் குழந்தைகளின் கால் தடம் பதியப்பட்டு பக்திப் பாடல்களைப் பக்தர்கள் பாடினர். உற்சவ மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் வைத்து கோயில் வளாகத்தை சுற்றி வந்தனர். குழந்தைகள் கண்ணன் வேடமிட்டு கலந்துகொண்டனர். இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர். விழாக்குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.