சங்ககிரி அருகே ஆம்னி வேன் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகன் இருவரும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
சேலம் அம்மாப்பேட்டை, தியாகி நடேசன் தெரு பகுதியைச் சேர்ந்த பெருமாள்முருகன், அவரது மகன் மாரியப்பன் உள்பட உறவினர்கள் ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோயில் மற்றும் அப்பகுதியில் உள்ள குல தெய்வ கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் ஆம்னி வேனில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை மாரியப்பன் ஓட்டிச் சென்றார். சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன், சங்ககிரி மங்கரம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த மாரியப்பன் (48),
இவரது தந்தை பெருமாள்முருகன் (75) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதில் மாரியப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பெருமாள்முருகன் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். வேனில் வந்த 6 பேரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.