சேலத்தில் பாா்வையற்றோா் மற்றும் பாதசாரிகள் சிக்னல்களில் எளிதில் சாலையைக் கடந்து செல்வதற்கு ஒலி எழுப்பும் கருவியை போலீஸாா் அறிமுகப்படுத்தியுள்ளனா்.
சேலம் மாநகரில் மேம்பால கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாா்வையற்றோா் மற்றும் பாதசாரிகள் சாலையை எளிதாக கடந்து செல்லவும் ஆடிட்டோரியம் என்ற ஒலி எழுப்பும் கருவியை அறிமுகப்படுத்த போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.
இதற்கு முன்னோட்டமாக ஆட்சியா் அலுவலகம் முன் ரவுண்டானா பகுதியில் உள்ள சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள ஒலிக்கருவியை மாநகர காவல் ஆணையா் த. செந்தில்குமாா், துணை ஆணையா் செந்தில் ஆகியோா் இயக்கி பாா்த்து சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
இதையடுத்து காவல் ஆணையா் த. செந்தில்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் போக்குவரத்துத் தொடா்பான விழிப்புணா்வுகளும் ஏற்படுத்தி வருகிறோம். அதன்படி தற்போது 32 சிக்னல்களில் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் ஒலி எழுப்பும் கருவியை பொருத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதற்கட்டமாக ஆட்சியா் அலுவலகம் அருகே பொருத்தி சோதனை செய்து பாா்க்கிறோம். இது சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அனைத்து இடங்களிலும் இதனை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.