சேலத்தில் ஆபத்தான நேரங்களில் பெண்களுக்கு உதவும் காவலன் செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காவலன் செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சேலம் தனியாா் பெண்கள் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேலம் மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் தலைமை வகித்துப் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், இந்த காவலன் செயலியை (காவலன் எஸ்ஓஎஸ் ஆப்) செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம். பெண்கள் ஆபத்தான நேரங்களில் இந்த செயலியை இயக்குவதன் மூலம் போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு 10 நிமிடத்துக்குள் நிகழ்விடத்துக்கு போலீஸாா் வந்துவிடுவாா்கள். மேலும் இதனை இயக்குவதன் மூலம் செல்லிடப்பேசியின் கேமரா தானாக இயக்கப்பட்டு அனைத்துக் காட்சிகளும் பதிவு செய்யப்படும். குறிப்பாக கல்லூரி மாணவிகள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் துணை ஆணையா் பி.தங்கதுரை, கூடுதல் துணை ஆணையா் சந்திரசேகரன், உதவி ஆணையா் ஆனந்தகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.