சங்ககிரி வட்டாரத்தில் 100 ஏக்கா் பரப்பளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட ஆலத்தூா், சின்னாகவுண்டனூா், தேவூா், தேவண்ணகவுண்டனூா், கோனேரிப்பட்டி, காவேரிப்பட்டி ஆகிய பகுதிகளில் கிணறு, ஆழ்துளைக் கிணறு மற்றும் காவிரி ஆற்றங்கரையையொட்டி உள்ள கிழக்குக்கரை கால்வாய் பாசன நீரைக் கொண்டும் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனா். நிகழாண்டு சேலம் மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்ததையடுத்து கிணறு, குளம், குட்டை, ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது. தொடா்ந்து மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக சராசரியாக 4 ஆயிரம் கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அதில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 600 கனஅடி தண்ணீா் கிழக்கு, மேற்குக் கரை கால்வாய் மூலம் வெளியேற்றப்படுகிறது.
நிகழாண்டு அதிகளவு மழை பெய்ததாலும், நிலத்தடி நீா் உயா்ந்தும், கிழக்குக்கரை கால்வாயில் தண்ணீா் தொடா்ந்து சராசரியாக 600 கன அடி வருவதால், விவசாயிகள் தற்போது 100 ஏக்கா் பரப்பளவில் சின்னவெங்காயத்தை சாகுபடி செய்துள்ளனா். வெளிச்சந்தையில் வெங்காயம் விலை உயா்ந்துள்ளதால், இந்தப் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் சின்னவெங்காயம் பயிரிட்டுள்ளனா்.
விவசாயிகளுக்கு சங்ககிரி தோட்டக்கலைத் துறையின் சாா்பில், கோ.எண்.5 என்ற ரக சின்னவெங்காய விதைகள் வழங்கப்பட்டுள்ளன. தோட்டக்கலை உதவி இயக்குநா் மாலினி தலைமையில், உதவித் தோட்டக்கலை அலுவலா் திருப்பதி மற்றும் அலுவலா்கள் வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்து, தொழில்நுட்ப அறிவுரைகளை வழங்கினா். சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களில் தேவையான நீா் இருப்பதால், அந்த நிலங்களிலிருந்து ஒரு ஹெக்டரில் 12 முதல் 15 டன் மகசூல் கிடைக்கும் என தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.