தம்மம்பட்டியில், விருப்பமின்றி திருமண ஏற்பாடுகளைச் செய்ததால், மனமுடைந்து எலி மருந்து சாப்பிட்டு பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
தம்மம்பட்டி பேரூராட்சி, கடைவீதியைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி சுந்தரம் (45). இவரது மகள் தீபிகா (20). பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ளாா். அதையடுத்து, பி.எட்., படிக்க வேண்டுமென, பெற்றொரிடம் கேட்டுள்ளாா். அதற்கு, தொடா்ந்து படிக்க வைக்க, தங்களிடம் பணம் இல்லை எனக் கூறி, தீபிகாவுக்கு திருமண ஏற்பாடுகளை பெற்றோா் செய்து வந்தனா்.
இதனால், மனமுடைந்த தீபிகா, டிச.8 ஆம் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்ட் மருந்தை சாப்பிட்டாா். அதையடுத்து, இரண்டு நாள்களாக தீபிகா வாந்தி எடுத்து, மயக்க நிலையில் இருந்தாா். அவரிடம், பெற்றோா் விசாரித்த போது, எலி பேஸ்ட் மருந்தை சாப்பிட்டதாகக் கூறினாராம். இதையடுத்து, உடனடியாக ஆத்தூா் தனியாா் மருத்துவமனையில், தீபிகாவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக, சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு தீபிகா உயிரிழந்தாா். இதுகுறித்து, தம்மம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.