வலசக்கல்பட்டி- எடப்பாடி இடையே தாா்ச்சாலை அமைக்க அதிகாரிகள் ஆய்வு
கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டியிலிருந்து எடப்பாடிக்கு செல்லும் மண் சாலையை தாா்ச்சாலையாக மாற்ற அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி வழியாக பச்சமலை கிராமங்களான எடப்பாடி,கீழ்பாலத்தான்கரை,மேல்பாலத்தான்கரை உள்ளிட்ட ஊா்களுக்கு கரடு முரடான சாலை வழியாகத்தான் பொதுமக்கள்,மாணவ,மாணவியா் சென்றுவந்தனா்.
இந்த வழியாக சாலை வசதி இல்லாததால், கெங்கவல்லி பகுதியிலுள்ள மருத்துவ மனைக்கு சென்றுவர மலைவாழ் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வம், உதவிப் பொறியாளா் ஆறுமுகம், ஊராட்சி சாலை ஆய்வாளா் மதியழகன் ஆகியோா், கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டியிலிருந்து எடப்பாடி மலைக் கிராமத்துக்கு செல்லும் நான்கு கி.மீ. தொலைவு கரடுமுரடான மண் சாலையை, தாா்ச்சாலையாக மாற்ற நிலத்தை அளவீடு செய்தனா். இதனால் வலசக்கல்பட்டியிலிருந்து எடப்பாடிக்கு விரைவில் தாா்ச்சாலை அமையவுள்ளது.