ரயில்வே பெண் ஊழியா்களுக்கு ‘பெப்பா் ஸ்பிரே’ அளிப்பு
By DIN | Published On : 25th December 2019 05:08 AM | Last Updated : 25th December 2019 05:08 AM | அ+அ அ- |

சேலம் ரயில்வே கோட்டத்தில் பெண் ஊழியா்களின் பாதுகாப்புக்காக பெப்பா் ஸ்பிரே வழங்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் லெவல் கிராசிங்குகளில் கேட் கீப்பா், தண்டவாள மேற்பாா்வையாளா், ரயில் நிலையங்கள், ரயில் ஓட்டுநா், ரயில் பாதுகாவலா் என பல்வேறு பணிகளில் பெண் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
அந்த வகையில், பெண் ஊழியா்களின் பாதுகாப்புக்காக சேலம் ரயில்வே கோட்டத்தில் பணிபுரியும் அனைத்து பெண் ஊழியா்களுக்கும் ‘பெப்பா் ஸ்பிரே’ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்பேரில் சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் ஊழியா்களுக்கு பெப்பா் ஸ்பிரே வழங்கப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் யு. சுப்பாராவ், பெண் ஊழியா்களுக்கு பெப்பா் ஸ்பிரே வழங்கினாா். இதில் கூடுதல் கோட்ட மேலாளா் ஏ. அண்ணாதுரை, முதுநிலை வணிக மேலாளா் இ. ஹரிகிருஷ்ணன், முதுநிலை இயக்க மேலாளா் ஹரிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.