மேட்டூர் அருகே இருசக்கர வாகனங்களை திருடி அடகு வைத்த இரு இளைஞர்களை ஜலகண்டபுரம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கட்டிநாயக்கன் பட்டியில் ஜலகண்டபுரம் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வாகனத்தை திருப்பிகொண்டு செல்ல முயன்றனராம். அவர்களை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் இருப்பாளி கிராமத்தை சேர்ந்த தங்கமணி மகன் சுரேஷ் (25), கே.ஆர்.தோப்பூர் காடக்காரனூரை சேர்ந்த செல்வராஜ் மகன் சக்திவேல் (24) என்பது தெரியவந்தது. அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஜலகண்டபுரத்தில் திருடியது என்பதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், மேச்சேரி, நங்கவள்ளி, ஜலகண்டபுரம், கொங்கணாபுரம் காவல் நிலையப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி குறைந்த விலைக்கு அடகு வைத்ததும், விறபனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவர்களிடமிருந்து 15 இருசக்கர வாகனங்களை மீட்டனர். தொடர்ந்து, இருரையும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்
அடைத்தனர்.