பாஜகவுடன் கூட்டணி சேரும் கட்சிகளையும் முறியடிக்க வேண்டும்: இரா.முத்தரசன்
By DIN | Published On : 14th February 2019 09:41 AM | Last Updated : 14th February 2019 09:41 AM | அ+அ அ- |

பாஜக-வுடன் கூட்டணி சேரும் கட்சிகளையும் முறியடிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
சேலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 26-ஆவது மாநில மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது. மாநாட்டின் நிறைவு நாளான புதன்கிழமை மாநாட்டு பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
மாநாட்டில் பங்கேற்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசும், மாநில அரசும் மாறி மாறி உதவித் தொகையை அறிவித்திருப்பது, மக்களவைத் தேர்தலை மனதில் வைத்துதான். இதன்மூலம் அவர்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று கருதுகின்றனர்.
தமிழகத்தில் வறட்சி, இயற்கை சீற்றம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. கடும் இழப்பைச் சந்தித்த அவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் விவசாய விரோத அரசாக செயல்பட்டு வருகின்றன. இதன் எதிரொலி வரும் மக்களவைத் தேர்தலில் வெளிப்படும்.
திமுக தலைமையில் 9 கட்சிகள் கொண்ட ஓர் அணியாக உள்ளோம். இந்த அணி மிகுந்த பலத்தோடு உள்ளது. இது வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவதுடன், அதனை முறியடிக்கவும் செய்யும். பாஜக-வுடன் கூட்டணி சேரும் கட்சிகளையும் முறியடிக்க வேண்டும். தேர்தலில் இதுதான் எங்களின் நிலைப்பாடாகும் என்றார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் இரா.முத்தரசன் பேசினார். இதில், சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.குணசேகரன், மாவட்டச் செயலர் என்.கே.செல்வராஜ், மாநில பொதுச் செயலர் வே.துரைமாணிக்கம், மாவட்டச் செயலர் ஏ.மோகன், வரவேற்புக்குழு பொருளாளர் எம்.ராமன் உள்ளிட்டோர் பேசினர்.