ஆத்தூர் புதுப்பேட்டையில் ஹார்டுவேர்ஸ் கடையில் புகுந்து மிரட்டி தகராறு செய்த 5 பேர் மீது ஆத்தூர் காவல் ஆய்வாளர் என்.கேசவன் வழக்குப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை ஒருவரை கைது செய்துள்ளார்.
ஆத்தூர் புதுப்பேட்டை முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் முகமது பாரூக் (65). இவர் அப்பகுதியில் உள்ள மசூதியில் நிர்வாகக் குழுவில் செயலாளராக இருந்துள்ளார். அந்தப் பொறுப்பை 6 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை காரணமாக வேண்டாம் என எழுதிக் கொடுத்துவிட்டார். அந்தப் பொறுப்புக்கு தற்போது யாரை நியமிக்கலாம் என கேள்வி எழும்போது,இவருடைய ஆலோசனைகளைக் கேட்டுள்ளனர்.இவருடையை ஆலோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒரு தரப்பினர், அவருடைய ஹார்டுவேர்ஸ் கடையில் புகுந்து கொலை மிரட்டல் விடுத்தனராம்.இது குறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் முகமது பாரூக் புகார் கொடுத்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் என்.கேசவன், முகமது பாரூக் கடையில் உள்ள சிசிடிவி கேமராவை கண்காணித்து, கொலை மிரட்டல் விடுத்தவர்களை தேடி 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்தார்.
விசாரணையில் வதூத்,பர்கத்அலி, முபாரக், தயா, பிரதாப் என்பது தெரியவந்தது.இதில் பிரதாப்பை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் தலைமறைவான 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.