தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் நெகிழி பயன்பாடு தொடங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் தொலைநோக்கு சிந்தனையுடன் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு கடந்த ஜன.1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜன.1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நெகிழிப் பயன்பாட்டைக் கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உணவகங்கள், தேநீர்க் கடைகளில் நெகிழிப் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டது. பாத்திரங்களில் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன.11-ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புழக்கத்தில் வந்துள்ள நெகிழிப் பொருள்களை தடை செய்து அதற்கான தடையை தொடர்ந்து அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பது சமூக நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.