ஓமலூர் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற ஒப்பந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு காடையாம்பட்டி வட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வந்துள்ளார். இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அந்தக் குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை செய்வதற்காக ரத்தப் பரிசோதனை மையத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது ரத்தப் பரிசோதனை மையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியரான ஓமலுர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த யோகானந்த் (30) என்பவர், குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை செய்துவிட்டு, அதன் தாய்க்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் தனது கணவர் மற்றும் பொதுமக்களிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஒப்பந்த ஊழியர் யோகானந்தை பிடித்து மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மாவட்ட இணை இயக்குநர் சத்தியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் யோகானந்தை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.