சேலம் ரயில் பாதையில் இளைஞர் கழுத்தறுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் ரயில்வே சரக்கு ஏற்றும் நிலையம் (கூட்ஸ் செட்) உள்ளது. இங்கு புதன்கிழமை காலை மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் சிலர் வந்த போது, ரயில் பாதையில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் சேலம் ஜங்சன் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, ரயில்வே போலீஸார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு விசாரித்தனர். மேலும் ரயில் பாதை அருகே கிடந்த ரத்தக் கறை படிந்த கத்தியையும் போலீஸார் கண்டெடுத்தனர். இதனால் இறந்து போன இளைஞரை யாரோ கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து, சடலத்தை ரயில் பாதையில் வீசி இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது. இறந்து போன நபர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலையை அறிந்த சேலம் நகர உதவி கமிஷனர் ஈஸ்வரன் மற்றும் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.