சேலத்தில் செருப்புக் கடை உரிமையாளர் வீட்டில் குண்டு வீசிய 2 வெள்ளிப் பட்டறை தொழிலாளர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சேலம் கோட்டை சின்னசாமி தெருவைச் சேர்ந்த கபீர் அகமது (45), பழைய பேருந்து நிலையத்தில் செருப்புக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திங்கள்கிழமை வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் முன் பாட்டில் ஒன்று வெடித்தது. இந்த சத்தத்தில் அதிர்ச்சியடைந்த கபீர் அகமது மற்றும் குடும்பத்தினர் வீட்டின் முன் வந்து பார்த்தனர். அப்போது, கதவின் முன் இருந்த மறைப்பு துணி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாம்.
உடனடியாக தீயை அணைத்த கபீர் அகமது, இதுகுறித்து சேலம் நகர போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கபீர் அகமது வீட்டின் முன் தினமும் இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதை கபீர் அகமது தட்டிக் கேட்டுளளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வீசியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சம்பவத்தின்போது அங்கு மது அருந்திய கோட்டை சின்னசாமி தெருவைச் சேர்ந்த வெள்ளிப் பட்டறை தொழிலாளிகளான சலீம் பாஷா (30) மற்றும் ரகுமான் (30) ஆகியோரை போலீஸார் விசாரணை செய்தனர். இதில் மது அருந்த கபீர் அகமது எதிர்ப்புத் தெரிவித்ததால், பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் 2 பேரையும் புதன்கிழமை கைது செய்தனர்.
இதில், சலீம் பாஷா கடந்த சில மாதங்களுக்கு முன் அப் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த 7 இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.