எடப்பாடி பகுதியில் புதிய நீதிமன்றம் அமையவுள்ள கட்டடத்தை, மாவட்ட தலைமை நீதிபதி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதி மக்கள் சிவில் மற்றும் குற்ற வழக்குகள் தொடர்பாகவும், சட்ட உதவிகள் பெறவும் சங்ககிரி பகுதி நீதிமன்றங்களை அணுகி வந்தனர். இந்த நிலையில் இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, எடப்பாடி பகுதியில் புதிய குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் சிவில் நீதிமன்றங்கள் அமைத்திட அண்மையில் தமிழக நீதித்துறை அனுமதி அளித்தது. இதனையடுத்து எடப்பாடி - ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள தனியார் கட்டடத்தில் புதிய நீதிமன்றம் அமைவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்ற உள்கட்டமைப்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில், வெள்ளிக்கிழமை மாவட்ட
குற்றவியல் முதன்மை அமர்வு தலைமை நீதிபதி குமரகுரு, மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முனுசாமி ஆகியோர் புதிய நீதிமன்றக் கட்டடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
மேலும், வரும் ஜுலை 20-ஆம் தேதிக்கு பிறகு புதிய கட்டடத்தில் நீதிமன்றம் செயல்பட வாய்ப்புள்ளதாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.