சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கிணற்றில் இறங்கி விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட கூடிய பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், பாரப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஒன்று திரண்ட விவசாயிகளும், பெண்களும், கருப்புக் கொடி ஏந்தி முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை
எழுப்பினர்.
மேலும், விவசாய நிலங்களை அழித்துக் கொண்டு வரப்பட உள்ள இந்த திட்டத்துக்கு ஒரு போதும் நிலத்தைக் கொடுக்க மாட்டோம் என்றனர்.
இதேபோல சேலம் மாவட்டம், பூலாவரி அருகே உள்ள புஞ்சைக்காடு என்ற கிராமத்தில் ஒன்று திரண்ட விவசாயிகள், அங்குள்ள கிணற்றில் இறங்கி கருப்புக் கொடி ஏந்தியபடி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஓரண்டாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளைக் கண்டுகொள்ளாமலும், அவர்களை நேரில் சந்திக்காமலும், எட்டு வழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவது உறுதி என்ற தமிழக முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.