டிராக்டரில் சிக்கி சிறுமி பலி: உறவினர்கள் மறியல்
பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் டிராக்டரில் சிக்கி 5 வயது சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெத்தநாயக்கன்பாளையம் அடுத்துள்ள புத்திரகவுண்டன்பாளையம் தேவேந்திரநாடு பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (35). கூலித் தொழிலாளி. இவரது மகள் ஹாசினி (5). இவர் அங்குள்ள சாலையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக ராஜேந்திரன் (70) என்பவர் ஓட்டிச்சென்ற டிராக்டரில் சிக்கி சிறுமி ஹாசினி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஏத்தாப்பூர் காவல் நிலைய போலீஸார் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்படாததையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தீபா கணிக்கர் விரைந்து சென்று டிராக்டர் ஓட்டிச் சென்ற முதியவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் வாகனப் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.