தம்மம்பட்டி வாரச்சந்தையில் சுங்க வசூல் குறித்து பேனர் வைக்க செயல் அலுவலர் உத்தரவு
தம்மம்பட்டி பேரூராட்சி வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தையில் அதிக சுங்க கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் தெரிவித்ததையடுத்து, சுங்க வரி வசூல் குறித்து பேனர் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
தம்மம்பட்டி பேரூராட்சிக்குரிய காய்கறிகள் விற்பனை வாரச்சந்தை புதன்கிழமைதோறும் நடைபெறுகிறது. இச்சந்தைக்கு தம்மம்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், வாழக்கோம்பை, கீரிப்பட்டி, கொண்டயம்பள்ளி, கோனேரிப்பட்டி உள்ளிட்ட ஊர்களிலிருந்து காலை 7 மணிமுதல் இரவு 8.30 மணி வரை சுமார் 8 ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர். இருநூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வருகின்றனர். பச்சமலை, கொல்லிமலையிலிருந்து விளைபொருள்கள் புளி, பலாப்பழங்கள், மாம்பழங்கள், அன்னாசி உள்ளிட்ட அனைத்துவகையான பழங்களும் கூடைகளில் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் வாரச்சந்தையில் கூடுதல் சுங்கம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, தினசரி சந்தை மற்றும் வாரச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும் பொருள்களுக்குரிய சுங்க வரி வசூல் தொகையை பெரிய அளவில் பொதுமக்களுக்கும்,வியாபாரிகளுக்கும் தெரியும் வகையில் பேனர் வைக்க பேரூராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.