இளம்பிள்ளை அருகே மாணவியை, பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக புகார் கூறப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இந்த பள்ளியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) மாலை 4 மணியளவில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாணவ, மாணவியரின் பெற்றோர் மாலை 3.30 மணி அளவில் பள்ளிக்கு வரத் தொடங்கினர். இதையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியை அமுதா மற்றும் பிடிஏ கழக நிர்வாகிகள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இந்தப் பள்ளியில் மாணவ, மாணவியர் தங்களின் ஒழுங்கு நடவடிக்கை பற்றித் தாங்களாகவே கடிதம் எழுதிக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். " நான் எந்த ஒழுங்கீனமான செயல்களிலும் ஈடுபட மாட்டேன், ஒழுங்கீனமானச் செயல்களில் ஈடுபட்டால் பள்ளி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கீழ்ப்படிகிறேன்' என்று பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் கையெழுத்திட்டு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பள்ளிக் குழந்தைகளுக்கு, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களால் எந்த ஒரு தவறும் நடக்காது என எழுதிக் கொடுக்குமாறு பெற்றோர் தரப்பில் கேட்கப்பட்டது. இதனால் கூட்டத்தில் பெற்றோர்கள், பிடிஏ நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களிடையை கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு பெற்றோர் அனைவரும் வீடு திரும்பினார். இந்தக் கூட்டத்தின் போது பள்ளிக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.