மணிவிழுந்தான் காலனியில் கடந்த வாரம் முதியவர் ஒருவரைக் கட்டிப் போட்டு கொள்ளையடித்து சென்ற வழக்கில் 4 பேரை தலைவாசல் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
தலைவாசலை அடுத்துள்ள மணிவிழுந்தான் காலனியைச் சேர்ந்தவர் குமார் (74). விவசாயி. இவரது மனைவி அம்மணியம்மாள் (65). இருவரும் தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரத்தில் ஒருநாள் இரவு நேரத்தில் அம்மணியம்மாள் குளிக்கச் சென்ற போது அறையின் கதவை அடைத்துவிட்டு, குமாரை கட்டிப்போட்டுவிட்டு, வீட்டில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தலைவாசல் போலீஸார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த காட்டுக்கோட்டை முயல்கரடு பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் ஆனந்த் (22), அவரது சகோதரர் ஜெயப்பிரகாஷ் (26), திருப்பூர் ஜெயலலிதா நகர் பகுதியைச் சேர்ந்த சிவா (எ) சிவக்குமார் (43), துறையூர் ராமசாமி மகன் சீனிவாசன் (39) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.