மேட்டூர் அனல் மின்நிலையம் பி.என்.பட்டி பேரூராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி நிலுவையில் ஒரு பகுதி ரூ.2.67 கோடியை 23 ஆண்டுகளுக்கு பிறகு செலுத்தியுள்ளது.
மேட்டூர் அனல் மின்நிலையம் பி.என்.பட்டி பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ளது. மேட்டூர் அனல் மின்நிலையக் குடியிருப்புகள், அலுவலகக் கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 1992 - 93-ஆம் ஆண்டுமுதல் 2007 - 08-ஆம் ஆண்டு வரை சொத்து வரி செலுத்தி வந்தது.
இதேபோல அனல் மின்நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள நான்கு குளிர்நிலை மாடங்களுக்கான சொத்துவரி 1993 - 94-ஆம் ஆண்டுமுதல் செலுத்தப்படவில்லை. 2008 - 09-ஆம் ஆண்டு இரண்டாம் அரையாண்டு முதல் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் சொத்துவரி நிர்ணயம் செய்து தொகையை செலுத்தக் கோரி மேட்டூர் அனல் மின் நிர்வாகத்திடம் பேரூராட்சி நிர்வாகம் வலியுறுத்தி வந்தது. ஆனால் அனல் மின்நிலைய நிர்வாகம் பல்வேறு சொத்துகளுக்கும் ரூ.5, 92, 57, 89 4 சொத்துவரியை கடந்த 23 ஆண்டுகளாக செலுத்தப்படாமல் நிலுவையில் வைத்திருந்தது.
தொடர்ந்து அனல் மின் நிலைய நிர்வாகம் சொத்துவரி செலுத்த முன்வராத காரணத்தால் சொத்துகளை ஜப்தி செய்வதாக பேரூராட்சி நிர்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேரூராட்சிகளின் இயக்குநர் அறிவுரைப்படி சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் முருகன், மாவட்ட பேரூராட்சிகளின் உதவிப் பொறியாளர் செல்வராஜ், பி.என்.பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி, உதவிப் பொறியாளர் மணிமாறன் ஆகியோர் மேட்டூர் அனல் மின் நிலைய முதன்மைப் பொறியாளர் கண்காணிப்புப் பொறியாளர் ஆகியோருடன் மேட்டூர் அனல் மின்நிலைய வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசாணை மற்றும் சட்ட விதிகளின் நகல்கள் வழங்கி, நிலுவைத் தொகையினை உடனடியாகச் செலுத்த கோரினர்.
இதன் அடிப்படையில் சனிக்கிழமை மேட்டூர் அனல் மின்நிலைய அலுவலர்கள் சொத்து வரி நிலுவைக்காக முதல் கட்டமாக ரூ.2, 67, 45, 897-க்கான காசோலையை பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணியிடம் வழங்கினர்.