ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம், சட்டப் பணிகள் குழுத் தலைவரும், ஆத்தூர் சார்பு நீதிபதியுமான ஆர்.தனம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் விரைவு நீதிமன்ற நடுவர் தனலட்சுமி, மாவட்ட உரிமையியில் நீதிமன்ற நீதிபதி ரங்கராஜ், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 மாஜிஸ்திரேட் தங்கராஜ், ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 368 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் 255 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.1,04,34,357 வருவாய் ஈட்டப்பட்டது.இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 15 எடுத்துக் கொள்ளப்பட்டு 9 வழக்குகளில் தீர்வு காணப்பட்டன. இதில் வழக்குரைஞர் பி.அறிவுமணி, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சி.ராமலிங்கம், மூத்த வழக்குரைஞர்கள் ஆர்.ராமமூர்த்தி, பி.முத்துசாமி, சி.வி.ராஜேந்திரன், பாலகிருஷ்ணராஜ் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
சங்ககிரியில்...
சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1310 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 132 வழக்குகளில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் சமரச தீர்வு காணப்பட்டன.
சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்குகள், நிறைவேற்று மனுக்கள், வாரிசு உரிமை சான்றிதழ், வாடகை ஒப்பந்தம், குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கியில் உள்ளநிலுவைக் கடன்கள் உள்ளிட்ட 1310 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 132 வழக்குகளில் ரூ.2 கோடியே 89 லட்சத்து 96 ஆயிரத்து 369-க்கு சமரசம் செய்து வைக்கப்பட்டன.
சங்ககிரி வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மேகலா மைதிலி தலைமை வகித்து மக்கள் நீதிமன்றப் பணிகளை தொடக்கி வைத்தார். சார்பு நீதிபதி, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் எண் 1 - டி.சுந்தரராஜன், எண் 2 - எஸ்.உமாமகேஸ்வரி, ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜெகநாதன், சட்ட வட்டப்பணிகள் குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் ஐந்து தனி அமர்வுகளில் வழக்குகளை சமரசம் செய்து வைத்தனர்.