கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் 5000 மூட்டை பருத்தி ரூ.1.10 கோடிக்கு விற்பனையானது.
வாரந்தோறும் சனிக்கிழமை கொங்கணாபுரம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை மையத்தில் பருத்தி மற்றும் எள் ஏலம் நடைபெற்று
வருகிறது. தற்போது பருத்தி விளைச்சல் சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை இம்மையத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் சுமார் 5000 பருத்தி மூட்டைகள் 700 லட்டுகளாக பிரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கூட்டுறவு அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.
இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.5, 700 முதல் ரூ.6,259 வரை விற்பனையானது. சுரபி ரக பருத்தி குவிண்டால் ரூ.5,950
முதல் அதிகபட்சமாக ரூ.6,590 வரை விற்பனையானது. சனிக்கிழமை நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில், ரூ. 1 கோடியே 10
லட்சத்துக்கு பருத்தி வணிகம் நடைபெற்றது. இதேபோல இம் மையத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்திற்கு உரிய நேரத்தில் வர இயலாத விவசாயிகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், வரும் திங்கள்கிழமை எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே உள்ள கூடக்கல் கிளையில் நடைபெறும் பொது ஏலத்தில், விவசாயிகள்
தங்கள் உற்பத்தி செய்த பருத்தியை கொண்டுவந்து விற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.