சேலத்தில் சிறை வார்டன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரௌடி உள்பட 9 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சேலம் சூரமங்கலம் புதுசாலைப் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (28). சேலம் மத்திய சிறையில் வார்டனாகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வியாழக்கிழமை ஆண்டிபட்டி பகுதியில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சூரமங்கலம் ஆய்வாளர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ரௌடி டேவிட் என்ற உதயகுமார் (35) மற்றும் அவரது கூட்டாளிகள் அக்பர் பாட்சா (37), பாரூக் (37), செல்வம்(36), விக்ரம் (32), குமார் (27), ராஜேஷ் (35), சையத் பாஷா (34), மாதேஷ் (36) ஆகிய 9 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், சிறை வார்டன் மாதேஷ் ரௌடி டேவிட்டின் தோழி கார்த்திகாவை கேலி செய்து வந்ததுடன், காதலிப்பதாகக் கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக டேவிட் மாதேஷை அழைத்து எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த மாதேஷ் கடந்த ஆண்டு கார்த்திகா ஓட்டி வந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் செல்வத்தின் காரை தீ வைத்து எரித்துள்ளார். மேலும், டேவிட்டின் வீட்டு முன் நிறுத்தியிருந்த காரையும் மாதேஷ் தீ வைத்து எரித்துள்ளார். இதுதொடர்பான் வழக்கில் மாதேஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஆவேசமடைந்த மாதேஷ், சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு டேவிட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகத் தெரிகிறது. இந்தநிலையில், டேவிட் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாதேஷைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். மீன் பண்ணைக்கு மாதேஷ் வருவதைத் தெரிந்து கொண்டு அங்கு மாதேஷை வெட்டிக் கொலை செய்து விட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.