வாழப்பாடியில் நடைபெற்ற தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில், தமிழகத்தில் போலி ஆவண எழுத்தர்களை கட்டுப்படுத்த, பத்திரப்பதிவின் போது அரசு உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களின் கைரேகையைப் பதிவு செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம், சேலம் மாவட்டம், வாழப்பாடியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார்.
இக் கூட்டத்தில், கடந்த 1996-க்கு பிறகு ஆவண எழுத்துகளுக்கான தேர்வு நடத்தப்படவில்லை. இத்தேர்வினை உடனடியாக நடத்த வேண்டும். இத்தேர்வில், ஏற்கனவே பதிவுத்துறை தெரிவித்ததைப்போல, நகல் எழுத்தாளர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் போலி ஆவண எழுத்தர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு, ஆவணங்களை பத்திரப்பதிவு செய்யும்போது உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்கள் கைரேகையைப் பதிவு செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தியாவில் பல மாநில்களில் உள்ளது போல, தமிழகத்தில் முத்திரைத் தீர்வை 5 சதவீதமாகவும், பதிவு கட்டணத்தை ஒரு சதவீதமாகவும் குறைத்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
வழிகாட்டி மதிப்பீட்டு முறையிலுள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் நிறைவாக வாழப்பாடி ஆவண எழுத்தர் பார்த்திபன் நன்றி கூறினார். முன்னதாக, பத்திரம் மற்றும் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்திற்கான இலட்சினை அறிமுகப்படுத்தப்பட்டது.