சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் மே மாதம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 39 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மது அருந்தி வாகனம் ஓட்டியது, வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் சென்றது, செல்லிடப்பேசியை ஓட்டியபடி வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து போக்குவரத்து போலீஸார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அறிக்கை அனுப்பினர். அதையடுத்து சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் 39 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் தலைமையில் 1,415 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில் 129 வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அந்த வாகனங்களுக்கு ரூ. 2 லட்சத்து 42 ஆயிரத்து 370 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டன.