கெங்கவல்லியில் உரக்கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி வேளாண் துறை சார்பில் விதை, உரம், பூச்சி, மருந்து விற்பனையாளர்களுக்கு மக்காச்சோளம் படைப்புழு கட்டுப்படுத்துதல் பற்றி முன்பருவ விழிப்புணர்வு கூட்டம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குநர் சித்ரா, மக்காச்சோள வயலில் கடைசி உழவு செய்யும்போது வேப்பம் புண்ணாக்கு இடுவது மற்றும் விதைநேர்த்தி செய்த விதைகளை விதைப்பு செய்வது பற்றியும், ஊடுபயிர், வரப்பு பயிர், இனக்கவர்ச்சி பொறி வைப்பதனால், படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என்றார்.
வேளாண் அலுவலர் கல்பனா கூறுகையில், படைப்புழுக்களை கட்டுப்படுத்த சுழற்சிமுறையில் பூச்சிகொல்லி மருந்தினை பயன்படுத்துவது குறித்தும், தரமான மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்குமாறும் கூறினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் அற்புதவேலன், உதவி தொழில்நுட்ப மேலாளர் மோகன்ராஜ் ஆகியோர் மக்காச்சோளப் படைப்புழு கருத்து காட்சியினை விளக்கினர்.
கூட்டத்தில், கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து உரக்கடை உரிமையாளர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சங்கர் செய்திருந்தார்.