சங்ககிரி வட்டம், தேவூர், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை, பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் உள்ளனவா என்று சுகாதார ஆய்வாளர்கள் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடாஜலம், வைத்தீஸ்வரன், சக்திவேல், முஹமது அஷ்ரப் ஆகியோர் தலைமையில் சங்ககிரி வட்டம், தேவூர், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட தேவூர், மைலம்பட்டி, குஞ்சாம்பாளையம், மூலப்பாதை, குள்ளம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை, பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது குறித்து சோதனை நடத்தினர்.
அதில், விதிமுறைகளை மீறி போதைப் பொருள்கள் வைத்திருந்த கடையிலிருந்து அப்பொருள்களை பறிமுதல் செய்து, 28 கடைக்காரர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதனையடுத்து, குள்ளம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியரிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து சுகாதாரத் துறையினர் விளக்கிக் கூறினர்.